









You Are Here: Home » Featured, Flash from the Past » குரு கே.பாலச்சந்தர் கேட்ட மன்னிப்பு; கண்கலங்கிய ரஜினி!! - Rajni (Holi)Day Special Article!
இன்று ஹோலிப்பண்டிகை. ஒரு வகையில் இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள். 37 ஆண்டுகளுக்கு முன்பு தான் இதே போன்று ஒரு ஹோலிப்பண்டிகை அன்று தனது குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்களால் ‘ரஜினிகாந்த்’ என்று பெயர் சூட்டப்பட்டார் சிவாஜிராவ் கெய்க்வாட்.
இதையொட்டி, கடந்த ஆண்டு, திரைத்துறையின் மூத்த கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் சூப்பர் ஸ்டாரின் நலம்விரும்பிகள் ஆகியோரை அழைத்து, ஒரு பார்டி கொடுத்தார் திருமதி.லதா ரஜினிகாந்த். அது குறித்த லிங்க் கடைசியில் தரப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பத்திரிகையில் வெளிவந்த செய்தி இது. வெறும் கட்டிங் மட்டுமே உள்ளபடியால், எந்த பத்திரிக்கை என்று தெரியவில்லை. இருப்பினும், இன்றைக்கு இது வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி வெளியிடுகிறேன்.
ரஜினியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்
“நான் ஒரு கறுப்புத் தங்கத்தை கண்டெடுத்தேன். அது நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது”. என்று ரஜினிகாந்தை பற்றி பெருமையோடு சொல்கிறார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்.
தான் ரஜினியை வைத்து படங்களை இயக்கியபோது, வில்லத்தனமான, பொல்லாத்தனமான, கதாநாயகன் வேடங்களில் ரஜினிகாந்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் அளித்தார் கே.பாலச்சந்தர். அப்பொழுதெல்லாம் ரஜினிகாந்துடன் போராடித்தான் கோபதாபங்களுக்கிடையே அவரை நடிக்க வைக்க வேண்டிருந்தது.
“ரஜினிகாந்திற்கு தமிழ் சரி வரப் பேச வரவில்லை. ‘எனக்கு தமிழ் பேச வரலீங்க. என்னை விட்டுடுங்க ப்ளீஸ்!’ என்றெல்லாம் அவர் பரிதாபமாக சொல்லியிருக்கிறார். முகத்திலும் நான் எதிர்பார்த்த உணர்சிகள் பிரதிபலிக்கவில்லை. என்னுடைய கண்டுபிடிப்பு பயன்படாமல் போய்விடுமோ என்ற அதைரியம் எனக்கு ஏற்பட்டது. ஆனாலும் நான் அவரை விடவில்லை. ஏனென்றால், அவரைப் பார்க்கும்போழுதேல்லாம் ‘அவரிடம் ஏதோ சில திறமைகள் இருக்கின்றன. அவற்றை எப்படியாவது பாடுபட்டு வெளிப்படுத்திவிடவேண்டும்’ என்ற உணர்வு எனக்கு உண்டாயிற்று” என்கிறார் இயக்குனர் பாலச்சந்தர்.
பாலச்சந்தரின் முயற்சிகள் வீண் போகவில்லை. ஒரு சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் புகழ் பெற்றதற்கு அவர் அந்தக் காலத்தில் பாடுபட்டது தான் காரணம்.
ரஜினிகாந்தை பற்றி பாலச்சந்தர் பேசிக்கொண்டிருந்தபோதெல்லாம் வேறு சிலருக்கு இல்லாத சிலவற்றை பற்றி சிறப்பாக குறிப்பிட்டதுண்டு.
அந்த கண்கள்; நெற்றிப்பக்கம் கொத்தாக கலைந்து விழும் தலைமுடி; நடனக் காட்சிகளில் அவர் பின்பற்றும் நளினம்….. போன்றவற்றை பற்றி அவர் குறிப்பிட்டுவிட்டு “ரஜினிகாந்திடம் நான் ரசித்தவை. தட் இஸ் ரஜினிகாந்த்” என்கிறார்.
கவிதாலயா படத் தயாரிப்புகளில் ரஜினிகாந்த், ‘நெற்றிக்கண்’, ‘நான் மகான் அல்ல’, ‘வேலைக்காரன்’, ‘ஸ்ரீ ராகவேந்திரர்’, ஆகிய படங்களில் நடித்தபோது, கே.பாலச்சந்தர் அவற்றை இயக்கவில்லை. எஸ்.பி.முத்துராமனிடம் அந்த பொறுப்பை நம்பிக்கையுடன் அளித்து இருந்தார். பிறகு அபார வெற்றிபெற்ற ‘அண்ணாமலை’ படமும் அவரால் இயக்கப்படவில்லை. அதை இயக்கியவர் அவரது சீடர் சுரேஷ் கிருஷ்ணா.
தான் தயாரிப்பு நடிகராக ஆரம்ப காலத்தில் ரஜினியை உருவாக்கிய பாலச்சந்தர் பிறகு ஏன் தன் இயக்கத்தில் நடிக்க வைக்கவில்லை?
அந்தக் கேள்வியை அவரிடமே கேட்டேன்.
“என்னை குருநாதர் என்ற அளவுக்கு ரஜினிகாந்த் பக்தி செலுத்தத் தொடங்கிவிட்டார். அந்த பக்திக்கு நடுவே அவரை நானே டைரக்ட் செய்தால், பயமும், மரியாதையின் காரணமாக பணிவும் தான் மேலோங்கி நிற்குமே தவிர, நான் எதிர்பார்க்கும் நடிப்பை அவரால் சரிவர பிரதிபலிக்க முடியாது. அதோடு அவர் இப்பொழுது புகழ் பெற்றுவிட்டதால் முன்பு போல அதட்டி, மிரட்டி, திட்டி அவரிடம் வேலை வாங்க முடியாது. எனவே நட்பு உணர்வுடனும் நல்லவிதமாக நடிக்க வைக்க எஸ்.பி.முத்துராமன் போன்ற இயக்குனர்களால் தான் முடியும் என்று தீர்மானித்தேன். அது சரியான தீர்மானம் இல்லையா?” என்னிடமே திருப்பி கேட்டார் பாலச்சந்தர்.
“இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய போது, நான் கவனித்து இருக்கிறேன். இருவரும் மனம் விட்டு பேசுவார்கள். சொந்த சகோதரரிடம் பேசுகிற உரிமையோடு ரஜினிகாந்த் அவரிடம் பேசுவார். சில காட்சிகளை படமாக்குவதற்கு முன்பு, சில கருத்துக்களையும் கூறுவார். அவை சிறப்பாக இருக்குமானால் எஸ்.பி.எம். ஏற்றுக்கொண்டு அப்படியே படமாக்குவார்.” அது போல, தன் குருநாதரிடம் மனம் விட்டு ரஜினிகாந்தினால் பேச முடியுமா? கருத்துக்களை கூற முடியுமா?
எனவே தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்ததாக கூறுகிறார் கே.பி.
அவர் மேலும் தொடர்கையில்….
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்னும் தகுதி பெற்று லட்சகணக்கான ரசிகர்களினால் கவரப்பட்ட நிலையில் ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டப்பட்டது. அதன் தொடக்க விழா அன்று ஏராளமான படவுலகப் பிரமுகர்கள், ரஜினிகாந்தின் எண்ணத்திற்கு ஏற்றம் தந்தது போற்றிப் புகழ்ந்தார்கள். “அவர் நடிகர் மட்டும் அல்ல. நல்ல மனிதரும் கூட” என்று புகழாரம் சூட்டினார்கள்.
ஆனால், கே.பி. ஆச்சரியப்படும்படி அங்கே கூறினார்…. “ரஜினிகாந்தை என்னைப் போல யாரும் திட்டியது இல்லை. ‘உனக்கு நடிக்கவே வராது’ என்று எத்தனையோ தடவை, அவரை கேமராவிற்கு முன் ஏசிப் பேசியிருக்கிறேன். வேறு யாராவது இருந்தால், சினிமாவே வேண்டாம் என்று மேக்கப்பை கலைத்துவிட்டு ஓடிப்போயிருப்பார்கள். ஆனால் ரஜினிகாந்த்? எப்படியும் பாடுபட்டு நடித்து புகழ் பெறவேண்டும் என்று வைராக்கியம் கொண்டு இருப்பார் என்று நினைக்கிறேன். அந்தச் சவால் உணர்வு தான், அவரை இன்று சூப்பர் ஸ்டார் ஆக்கியிருக்கிறது. இவ்வளவு திறமை உள்ள ஒருவரை நான் நடிப்பே வராது என்று திட்டியதற்கு இன்று மனப்பூர்வமாக மன்னிக்கவேண்டுகிறேன்.” என்றார் நா தழுதழுத்தபடி.
இப்படி தன் குருநாதர் பாலச்சந்தர் அறிவித்தபோது, ரஜினிகாந்த் கண்களில் கண்ணீர் ததும்ப முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். குரு சீடனை சிறப்பித்து பேசிய ஒரு மகத்தான நல்ல உள்ளத்தை படவுலகமே அன்று வியந்தது.
இன்றைக்கும் குருபக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சூப்பர் ஸ்டார் விளங்குகிறார்.
குருவருளின்றி திருவருள் ஏது?
——————————————————————————————-
Also check :
திருமதி. லதா ரஜினி ஏற்பாடு செய்த ‘ரஜினிகாந்த்’ விழா — திரண்டு வந்த வி.ஐ.பி.க்கள்! ஒரு கிளியர் கவரேஜ்!!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10689
——————————————————————————————-
[END]
இன்றைக்கும் குருபக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சூப்பர் ஸ்டார் விளங்குகிறார்.
சூப்பர் தலைவா …
நேரத்திற்கு ஏற்ற பதிவு….
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
நன்றி சுந்தர் ,
சூப்பர் பதிவு. நல்ல நாளில் நல்லதொரு பதிவு.
நன்றி சுந்தர்ஜி
ப.சங்கரநாராயணன்
Thank you na for giving an rare news. Unarvu poorva mana nigalchi.
nice update bro
அருமையான பதிவு சுந்தர்ஜி
குருபக்திக்கு நமது தலைவர் ஒரு வாழும் உதாரணம்
மிக்க நன்றி !!!
இதுவரை எங்கும் கேள்வி படாத விஷயங்கள் & புகைப்படங்கள். செம்ம "மாஸ்" !! குரு பக்தி என்றால் அகராதியில் ரஜினிகாந்த் என்று தான் இருக்கும்!!! தலைவர் நமக்கு மேம் மேலும் எவ்வளவு பாடம் கற்பித்த வண்ணம் இருக்கிறார்!!
பல பேர் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிற காலத்தில் ,இன்றும் தன குருநாதர் மேல் பன்மடங்கு மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள நம் தலைவருக்கு என்றுமே அவருடைய ஆசி இருக்கும் .ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
thalaivarukku pirandha naal vaazhthukkal !!!
peyarukku peyar sertha periyon vaazhgha !!!